search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvSL"

    • நியூசிலாந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரித்து வைப்பது அவசியம்.
    • இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், நெருக்கடியின்றி விளையாடும்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது. இதனால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என முக்கியமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    தற்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் தலா நான்கில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதிக ரன்ரேட் வைத்திருந்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில்தான் நியூசிலாந்து இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மைதானம் ரன் குவிக்க சாதகமானது. இதனால்தான் கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 400 ரன்களுக்கு மேல் குவித்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தானின் தொடக்க வீரர் பஹர் ஜமான் அதிரடியாக விளையாடி சதம அடிக்க, மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இன்று சிறப்பாக விளையாடி வெற்றிக்காக முயற்சிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது. இதனால் இன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லலாம்.

    இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர்தான் பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து 11-ந்தேதி விளையாட இருக்கிறது. இன்று நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் கூட, இங்கிலாந்துக்கு எதிராக ரன்ரேட் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்ப உள்ளது. இதனால் நியூசிலாந்து வெற்றி பெறுவதுடன் ரன்ரேட்டை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. புள்ளிகள் பட்டியலில் எந்த இடம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கும். இதனால் நெருக்கடி இன்றி இலங்கை வீரர்கள் விளையாடுவார்கள். நியூசிலாந்துக்கு இது முக்கியமான போட்டி என்பதால் வெற்றிக்காக விளையாடுவார்கள். இதனால் அந்த அணியின் ரன் குவிப்பு தொடர வாய்ப்புள்ளது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ரசிகர்கள் ரன் குவிப்பை காணலாம்.

    • நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
    • இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    குயின்ஸ்டவுன்:

    நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று குயின்ஸ் டவுனில் நடந்தது.

    டாஸ் ஜெயித்து நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. குசல் மென்டிஸ் 48 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். குசல் பெரைரா 33 ரன்னும், நிசாங்கா 25 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்பர்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 48 பந்தில் 88 ரன்கள் எடுத்தார்.

    இதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் டாம் லதாம் 31 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

    குமாரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சாப்மேன், அடுத்த பந்தில் அவுட் ஆனார். 3-வது பந்தில் ஜேமி நிசமும் (ரன் அவுட்), மிட்செல்லும் கேட்ச்) அவுட் ஆனார்கள். அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது.

    நியூசிலாந்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் பெண் நடுவராக கிம் காட்டன் செயல்பட்டார்.

    டுனிடின்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து இரு அணிகளும் டி20 போட்டியில் மோதி வருகின்றனர். முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் பெண் நடுவராக கிம் காட்டன் செயல்பட்டார். இரு ஆடவர் அணிகளுக்கு இடையேயான சர்வதேச போட்டியில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.

    அவர் வெய்ன் நைட்ஸுடன் கள நடுவராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    • 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

    டுனிடின்:

    நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா அதிக பட்சமாக 20 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மிலின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் செய்பெர்ட் 43 பந்தில் 79 ரன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

    முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

    • முதலில் ஆடிய இலங்கை 196 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 196 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது.

    ஆக்லாந்து:

    இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அசலங்கா 67 ரன்னில் அவுட்டானார். குசல் பெரேரா அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்க் சாம்பன் 33 ரன்னும், டாம் லதாம் 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்து அசத்து 66 ரன்கள் விளாசினார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ரன் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 3 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்றது. அசலங்கா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 0-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
    • நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

    அதைத்தொடர்ந்து இந்திய மண்ணில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    அதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 41.3 ஓவரிலேயே 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி, ஹென்றி ஷிப்லே, டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 59 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் வில் எங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அதனால் 32.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2- 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.

    இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற ஐசிசி ஒருநாள் சூப்பர் லீக் தொடரின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கை அணி இத்தொடரில் தோல்வியை சந்தித்ததால் 2023 ஒருநாள் சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது.

    இதனால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.

    இதன் காரணமாக 2023 அக்டோபருக்கு முன்பாக நடைபெறும் தகுதி சுற்றில் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுகடன் மோதி அதில் வென்றால் மட்டுமே 2023 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

    • முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
    • இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.


    இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க அந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.

    • இலங்கை அணியில் மேத்யூஸ் 18, கருரத்ணே 11, லகிரு குமாரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.
    • நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இலங்கை அணியில் மேத்யூஸ் 18, கருரத்ணே 11, லகிரு குமாரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.

    நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது.

    • தனஞ்சய டி சில்வா 98 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் (215 ரன்) , ஹென்றி நிக்கோல்ஸ் (200 ரன்) ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 165 ரன்னில் சுருண்டு பாலோஆன் ஆனது. கேப்டன் கருணாரத்னே அதிகபட்சமாக 89 ரன் எடுத்தார். மேட் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    416 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. குஷால் மெண்டீஸ் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேத்யூஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    5-வது விக்கெட்டான சன்டிமால்-தனஞ்செய டிசில்வா ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது. சண்டிமால் 62 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு நிஷன் மதுஷ்கா 39 ரன்னில் 'அவுட்' ஆனார்.

    மறுமுனையில் இருந்த தனஞ்சய டி சில்வா கடுமையாக போராடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    இறுதியில் இலங்கை அணி 358 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி, டிக்னெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • நியூசிலாந்து 123 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • 94-வது டெஸ்டில் விளையாடும் வில்லியம்சனுக்கு இது 28-வது சதமாகும்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையால் தாமதமாக தொடங்கிய முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து இருந்தது.

    வில்லியம்சன் 26 ரன்னுடனும் ஹென்றி நிக்கோல்ஸ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினர். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்தின் ரன் வேகம் அதிகரித்தது. முதலில் சதம் அடித்த வில்லியம்சன் அதை இரட்டை சதமாக மாற்றினார். அவர் 215 ரன்னில் (296 பந்து 23 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார் 94-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு 28-வது சதமாகும். வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 363 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் வந்த டேரிஸ் மிட்செல் 17 ரன்னில் ஆட்ட மிழந்தார்.

    ஹென்றி நிக்கோல்சும் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 9-வது சதம் (54 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து 123 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 200 ரன்னுடனும் டாம் புளுன்டெல் 17 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை விளையாடியது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழந்து 26 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதல் நாள் ஆட்டம் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
    • தொடக்க வீரர் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் எடுத்தார்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இலங்கை கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    தொடக்க வீரர் டாம் லாதம் 21 ரன்னில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் எடுத்தார். 78 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். 48 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து இருந்தது.

    அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதே நிலை நீடித்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

    • இலங்கை அணி 2வது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து சார்பில் டிக்னெர் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இறுதி நாளான இன்று நியூசிலாந்து வெற்றி பெற 257 ரன்கள் தேவை என்பதாலும், இலங்கை வெற்றி பெற 9 விக்கெட்டுகள் தேவை என்பதாலும் கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    ×