search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 kg"

    • பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது.
    • ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன், ரெயில்வே போலீசார் அருள்செல்வம், ராஜவேல், சரவணகுமார் ஆகியோர் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தனர்.

    அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் (குட்கா) இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என பயணிகள் தெரிவித்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கடத்தல் கும்பல் குட்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.

    பின்னர் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்ததும் போலீசார் கைப்பற்றிய 20 கிலோ போதை பொருட்களை மீட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து போதை பொட்களை கடத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மது விலக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில், சூரம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கரோல் பிரான்சிஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். யார் யாரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் சூரம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூரம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக 2 பேர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா 90 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஸ்லிங் (55), செல்வராஜ் (56) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஹான்ஸ் -புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    ×