என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பாபா படத்தை மலர்களால் அலங்கரித்து, பாபாவை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடியபடி சென்றனர்.
    • நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

    பாபா தூங்கிய வலது பக்க அறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பகுதியை மிக, மிக புனிதமான இடமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள்.

    ஆண்கள், பெண்கள் தரிசனத்துக்காக தனிதனியே பிரிக்கப்பட்டுள்ள சாவடியில் இரு பாலாரும் வணங்க பாபா படம் வைக்கப்பட்டுள்ளது. பாபாவை வணங்கி முடித்ததும், பலர் அங்கு சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்வதுண்டு.

    உங்கள் வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டுமானால், சாவடியில் இந்த குறிப்பிட்ட இடத்தில் தியானம் இருப்பது நல்லது.

    பாபா உயிருடன் இருக்கும் போது, துவாரகமாயில் இருந்து சாவடிக்கு அவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மேள, தாளம் முழங்க அழைத்து செல்வார்கள். சில சமயம் பாபாவை வானவேடிக்கை, பஜனை பாடல்கள் பாடியபடி அழைத்து செல்வார்கள்.

    பாபா வளர்த்த சியாம் சுந்தர் எனும் குதிரை அவர் படத்தை முதுகில் சுமந்து செல்லும். அதன் பின்னால் பாபா நடந்து செல்வார். அப்போது பட்டு துணியில் செய்யப்பட்ட பல வண்ண குடையை பாபாவுக்கு பிடித்து வருவார்கள்.

    இந்த ஆடம்பரத்தை முதலில் பாபா மிகவும் வெறுத்தார். எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். ஆனால் பாபா மீது கொண்ட அபரிதமான பாசம் காரணமாக பக்தர்கள் யாரும் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

    ஒரு கட்டத்துக்குப் பிறகு பாபாவால் தன் பக்தர்கள் மேற்கொண்ட பட ஊர்வலத்தை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக துவாரகமாயில் இருந்து சாவடிக்கு பாபாவை பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அழைத்து செல்வது ஒரு சாம்பிரதாயமாகவே மாறிப்போனது.

    பாபா தெய்வமான பிறகும், இந்த பழக்கம் நின்று விடவில்லை. பாபா படத்தை மலர்களால் அலங்கரித்து, பாபாவை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடியபடி சென்றனர். நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

    இப்போதும் சீரடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா படம் அலங்கரிக்கப்பட்டு துவாரகமாயில் இருந்து சாவடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள சாய்பாபா கோவில்களில் வியாழன் தோறும் பாபா பட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    • பாபரே சின் சினிகர் என்ற பாபா பக்தர் தன் சொத்துக்களை எல்லாம் சீரடி தலத்துக்காக எழுதி வைத்து விட்டார்.
    • அந்த சொத்து வருவாயில் இருந்து கிடைத்த பணம் மூலம் சாவடியில் பளிங்கு கற்கள் பதித்து அழகுபடுத்தி உள்ளனர்.

    துவாரகமாயியை கண் குளிரப் பார்த்து, ஆத்மார்த்தமாக தரிசனம் செய்து முடித்த பிறகு நாம் செல்ல வேண்டிய இடம் சாவடி ஆகும்.

    துவாரகமாயியில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் சாவடி இருக்கிறது. இரண்டே நடையில் சாவடிக்கு சென்றடைந்து விடலாம்.

    சாவடி என்றால் பொது மக்கள் சந்தித்து கூடி பேசும் இடமாகும். அதாவது ஊர் சங்க கூட்டங்கள் அங்குதான் நடைபெறும்.

    மேலும் வழிப் போக்கர்கள் தங்குவதற்கும் அந்த சாவடி பயன்படுத்தப்பட்டது. அந்த சாவடி மிகப் பெரிய கட்டிடம் அல்ல.

    ஒரே ஒரு வராண்டா மாதிரியான சிறு அறை கொண்ட இடம்தான்.

    துவாரகமாயி மசூதி பழுதடைந்த காரணத்தாலும், மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகிய காரணத்தாலும், பாபாவை அவரது பக்தர்கள் சாவடியில் வந்து தங்குமாறு கூறினார்கள்.

    ஆனால் துவாரகமாயியில் இருந்து வெளியேற பாபாவுக்கு விருப்பம் இல்லை.

    எனவே சாவடிக்கு வர மாட்டேன் என்றார். ஆனாலும் பாபா பக்தர்கள் விடவில்லை. பாபாவை வற்புறுத்தி சாவடிக்கு அழைத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து பாபா சாவடியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ஒரு நாள் சாவடியிலும், மறு நாள் துவாரகமாயிலும் தூங்கும் பழக்கத்தை பாபா ஏற்படுத்தினார்.

    இதன் காரணமாக துவாரகமாயிக்கு கிடைத்த அதே மகிமை, மதிப்பு, மரியாதை எல்லாம் சாவடிக்கும் கிடைத்தது.

    சாவடிக்குள் வலது பக்க அறையில் பாபா தூங்கினார். பாபா தெய்வமானதும், சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், எப்படி புண்ணிய பூமியாக மாறியதோ, அது போல சாவடியும் புனிதப் பகுதியாக மாறியது.

    நாளடைவில் சாவடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த சிறிய இடம் சீரமைத்து சற்று பெரிதாக்கப்பட்டது.

    பாபரே சின் சினிகர் என்ற பாபா பக்தர் தன் சொத்துக்களை எல்லாம் சீரடி தலத்துக்காக எழுதி வைத்து விட்டார்.

    அந்த சொத்து வருவாயில் இருந்து கிடைத்த பணம் மூலம் சாவடியில் பளிங்கு கற்கள் பதித்து அழகுபடுத்தி உள்ளனர்.

    சாவடிக்குள் பாபா பயன்படுத்திய பலகை, நாற்காலி, சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளன. பாபா தெய்வமானதும், அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த பலகையும் சாவடியில் இருக்கிறது.

    சாவடிக்குள் ஆண்களும் பெண்களும் மொத்தமாக செல்ல முடியாது. சாவடியின் வலது பகுதியில் ஆண்களும் இடது பக்க பகுதியில் பெண்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாபா மனம் லயித்த அந்த இடம் நிச்சயம், அவருக்குள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாகும்.
    • எனவே உங்கள் வேண்டுதல்களை மறக்காமல் நந்தா தீபத்தை வணங்கி வையுங்கள். நிச்சயம் பாபா அருள் புரிவார்.

    சீரடி தலத்தில் பாபாவை வணங்கி முடித்து, குருஸ்தானில் வழிபாடுகளை செய்து விட்டு, உதி வாங்கியதும், அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம்.

    அங்குள்ள பசுமையான மரங்களும், மலர்ச் செடிகளும், பச்சைப் புல்வெளிகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும்.

    சாய்பாபாவே இந்த தோட்டத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விதம், விதமாக செடிகளை நட்டு, அவற்றுக்கு அவர் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தார்.

    செடி வளர்க்க தண்ணீர் தேடி வேறு இடங்களுக்கு அலையக் கூடாது என்பதற்காக லெண்டித் தோட்டத்து உள்ளே கிணறு ஒன்றை பாபாவே ஏற்படுத்தினார். அந்த கிணறுக்கு ஷீவடி என்று பெயர்.

    தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து ஷீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார். இதனால் லெண்டித் தோட்டம் முழுவதும் பாபாவின் பாத மலர் கமலங்கள் பட்டுள்ளன.

    அந்த தோட்டத்துக்குள் சென்று ஒவ்வொரு பகுதியையும் அவசரப்படாமல் ஆற அமர்ந்து பாருங்கள். பாபா ஒவ்வொரு மரத்தையும் எந்த அளவுக்கு விரும்பி வளர்த்தார் என்பது தெரிய வரும்.

    லெண்டித் தோட்டம் பகுதியில் ஏற்கனவே ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அதன் அருகில் ஒரு வேப்ப மரத்தை நட்டு பாபா வளர்த்தார். அந்த மரம் இன்னமும் லெண்டித் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து நிற்பதைக் காணலாம்.

    அந்த மரங்கள் உள்ள இடத்தில் பாபா ஒரு பெரிய பள்ளம் தோண்டி அகண்ட நந்தா விளக்கு தீபம் ஏற்றி வைத்தார். அந்த நந்தா தீபம் இடைவிடாமல் எரிவதற்காக அப்துல்லா என்பவரை பொறுப்பாளராக பாபா நியமித்தார்.

    பாபாவையும், அப்துல்லாவையும் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பாபா தினமும் காலை, மதியம், மாலை மூன்று நேரமும் நந்தா தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்து விடுவார்.

    அந்த தீபத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயம் அரச மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனை செய்தபடி இருப்பார். சில நாட்கள் அங்கு மணிக்கணக்கில் கூட பாபா அமர்ந்து விடுவது உண்டு.

    லெண்டித் தோட்டத்துக்குள் வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் நந்தா தீபம் உள்ள பகுதியை சர்வ சாதாரணமாக பார்த்து விட்டு செல்கிறார்கள். ஆனால் நீங்கள் அப்படி செய்து விடாதீர்கள்.

    பாபா மனம் லயித்த அந்த இடம் நிச்சயம், அவருக்குள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாகும். எனவே உங்கள் வேண்டுதல்களை மறக்காமல் நந்தா தீபத்தை வணங்கி வையுங்கள். நிச்சயம் பாபா அருள் புரிவார்.

    சமீப காலமாக லெண்டித் தோட்டத்தில் ஏராளமான மலர்ச் செடிகள் வளர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியான நந்தவனமாக மாற்றியுள்ளனர். ஆங்காங்கே இருக்கைகளும் போட்டுள்ளனர்.

    அந்த இருக்கைகளில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். அந்த சமயத்தில் லெண்டித் தோட்டத்தின் பெருமையையும், சிறப்பையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

    • இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.
    • இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

    சீரடி கிராமத்து மக்களுக்கு முதன் முதலாக இங்குள்ள வேப்ப மரத்தடியில் தான் பதினாறு வயது பாலகராக பாபா காட்சியளித்தார்.

    இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.

    இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

    பாபா ஆரம்ப காலத்தில் இருந்ததின் நினைவாக பக்தர்கள் அவருடைய பாதுகைகள் இரண்டை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    பாபாவின் படத்தையும் பூஜையில் வைத்து பாபாவின் காலத்திலிருந்தே வழிபடத் தொடங்கினார்கள்.

    • அப்பொழுது பாபாவை அன்புடன் வரவேற்று வருக சாயி என்று இன்முகத்துடன் வரவேற்றவர் மகல்சாபதி தான்.
    • சாயி பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தை பெற்றவர் மகல்சாபதியே ஆவார்.

    மஹாராஷ்டிர மக்களின் குலதெய்வமான கண்டோபா என்பவர் சிவபிரானின் அவதாரமாவார்.

    சீரடிப் பேருந்து நிலையத்தின் அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது.

    சீரடியின் சாயிபகவான் கால் பதித்தபோது முதன் முதலில் அவர் அன்பராகி அடியவராகி அவர் அகத்தில் முதன்மை இடம் பெற்ற மகல்சாபதி இந்த ஆலயத்தில் பூசாரியாக பணி புரிந்தவர் தான்.

    சிலகாலம் சீரடியை விட்டு சென்ற பகவான், சாந்த்பாய் பட்டேல் குடும்பத்தின் திருமண கூட்டத்தோடு சீரடி நோக்கி வண்டியில் வந்த போது அவர் முதன் முதலில் இறங்கிய இடம் இதுவேயாகும்.

    அப்பொழுது பாபாவை அன்புடன் வரவேற்று வருக சாயி என்று இன்முகத்துடன் வரவேற்றவர் மகல்சாபதி தான்.

    சாயி பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தை பெற்றவர் மகல்சாபதியே ஆவார்.

    • பாபா சீரடிக்கு வந்த தொடக்க நாட்களில் அவருக்கு உணவு கொடுக்க பல பெண்கள் மறுத்துள்ளனர்.
    • ஆனால் அவரது மகிமை தெரிந்த பிறகு பலரும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவுக்கு உணவு கொடுத்தனர்.

    பாபா துவாரகமாயி மசூதிக்கு வந்து என்றைய தினம் தங்க தொடங்கினாரோ, அன்று முதல் துவாரகமாயியை சுத்தம் செய்யும் பணியை லட்சுமிபாய் ஷிண்டே ஏற்றுக் கொண்டார்.

    நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் பாபாவை வணங்குவதை பிரதானமாக வைத்திருந்தார்.

    லட்சுமிபாயிடம் பாபா, எப்போதாவது சாப்பிட உணவு வேண்டும் என்று கேட்பார். அதுவும் குறிப்பிட்டு இந்த வகை உணவுதான் வேண்டும் என்று கேட்பார்.

    சில சமயம் லட்சுமிபாய் சமைத்து கொண்டு வந்து கொடுக்கும் உணவை நாய், பூனை போன்ற பிராணிகளுக்குப் போட்டு விடுவார். லட்சுமிபாயும் அதை கண்டு கொள்ள மாட்டார்.

    பாபா சீரடிக்கு வந்த தொடக்க நாட்களில் அவருக்கு உணவு கொடுக்க பல பெண்கள் மறுத்துள்ளனர்.

    ஆனால் அவரது மகிமை தெரிந்த பிறகு பலரும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவுக்கு உணவு கொடுத்தனர்.

    பாபா தினமும் 5 வீடுகளுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

    ''பசிக்கு உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்'' என்று அர்த்தம் என பல தடவை பாபா கூறியுள்ளார்.

    சாய்பாபாவிடம் லட்சுமிபாய் ஷிண்டே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சேவை செய்து வந்தார். இதனால் அவர் மீது பாபாவுக்கு பாசம் அதிகம் இருந்தது.

    தனது இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த பாபா ஒருநாள் லட்சுமிபாய் ஷிண்டேயை அழைத்தார். அவரிடம் ஒரு ரூபாய் நாணயமாக 9 நாணயங்களை பாபா எடுத்துக் கொடுத்தார்.

    ''இதை வைத்துக் கொள்'' என்று கூறி ஆசீர்வதித்தார். பாபா தன் பக்தர்களில் ஒருவருக்கு செய்த கடைசி உதவி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய சிறப்புடைய லட்சுமிபாய் ஷிண்டே வீடும் சீரடி தலம் அருகிலேயே உள்ளது. லட்சுமிபாய் ஷிண்டே மரணம் அடைந்ததும், அவர் உடலை அவரது வாரிசுகள் வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதி கட்டி வைத்துள்ளனர்.

    மேலும் பாபா கொடுத்த 9 நாணயங்களையும் அவர்கள் அங்கு பத்திரப்படுத்தி வத்துள்ளனர். சீரடிக்கு செல்பவர்கள் மறக்காமல், தவறாமல் லட்சுமிபாய் ஷிண்டே வீட்டுக்கு சென்று விட்டு வரலாம்.

    • சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன.
    • அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.

    சீரடி தலத்தில் சமாதி மந்திர், குருஸ்தான், லெண்டித் தோட்டம், துவாரகமாயி, சாவடி ஆகிய இடங்களில் தரிசனம் செய்து முடித்ததும் சீரடி பயணம் முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

    சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன.

    அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.

    மகல்சபாதி இல்லம்

    சாய்பாபாவுக்கு எத்தனையோ கோடி பக்தர்கள் உள்ளனர். ஆனால் பாபாவின் முதல் பக்தர் என்ற பெருமையைப் பெற்றவர் மகல்சாபதி.

    கண்டோபா ஆலயத்தின் பூசாரியாக இருந்த இவர்தான் பாபாவை முதன்முதலில் ''சாயி'' என்று அழைத்தார் என்பதும், நாளடைவில் பாபாவுக்காக தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டு வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

    பாபா 1918&ம் ஆண்டு தெய்வமான பிறகு சுமார் 4 ஆண்டுகள் சீரடி தலத்தின் மேன்மைக்காக மகல்சாபதி பாடுபட்டார்.

    1922&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11&ந்தேதி மகல்சாபதி மரணம் அடைந்தார்.

    அவரது உடலை வீட்டில் ஒரு அறையில் சமாதி வைத்துள்ளனர். பாபாவுக்கு தன்னலமற்ற சேவை செய்த காரணத்தால் இவரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    மகல்சாபதி வீட்டில் பாபா அணிந்த காலணிகள், பிரம்பு, ஆடைகள், மற்றும் குப்னி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

    • அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை.
    • எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது.

    1918&ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15&ந்தேதி பாபா, சமாதியான போது அவர் வைத்திருந்த பழைய பை ஒன்றை அவரது பக்தர்கள் எடுத்துப் பார்த்தனர்.

    அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை.

    எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது.

    அந்த பைக்குள் பச்சை நிற நீண்ட அங்கி உடையும், பச்சை நிற துணி தொப்பியும் இருந்தது. காசிராம் என்ற பக்தர் அந்த உடையை பாபாவுக்காக தைத்து கொடுத்திருந்தார்.

    பாபா உடல் சமாதிக்குள் வைக்கப்பட்ட போது, அவர் பயன்படுத்திய சில பொருட்களும், அந்த பச்சை நிற உடையுடன் கூடிய பையும் வைக்கப்பட்டது.

    பாபா அணிந்த வெள்ளை நிற உடைகள் சில, துவாரகமாயியில் இருந்தன. அவை அனைத்தும் இன்றும் சீரடி தலத்தில் உள்ள ''சாய்பாபா மியூசியம்'' அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    சீரடி செல்பவர்கள் மியூசியத்துக்கு சென்று பாபா மேனியில்பட்ட அந்த வஸ்திரங்களை கண் குளிரக் கண்டு வணங்கி வரலாம். அந்த வணக்கமே நிச்சயம் கோடி புண்ணியம் தரும்.

    • ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார்.
    • இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார்.

    சிலரை பார்த்ததும் அவர்களை ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் பாபாவுக்கு உதிப்பதுண்டு.

    அத்தகையவர்களுக்கு பாபா தன் கிழிந்த அங்கியை கழற்றி கொடுத்து விடுவார்.

    ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார்.

    இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார்.

    பாபாவிடம் முக்தாராம் என்றொரு பக்தரும் சேவை செய்து வந்தார்.

    ஒரு தடவை அவருக்கு தன் அழுக்கு உடை ஒன்றை கொடுத்து பாபா ஆசீர்வதித்தார்.

    தர்மசாலாவுக்கு வந்த முக்தாராம், பாபாவின் அழுக்கு உடையை நன்றாக துவைத்து வெளியில் இருந்த கொடியில் காயப்போட்டார்.

    பிறகு பாபாவை வணங்குவதற்காக துவாரகமாயிக்கு சென்று விட்டார்.

    அந்த சமயத்தில் வாமன்ராவ் என்ற பாபா பக்தர் அங்கு வந்தார்.

    அப்போது அவருக்கு அசரீரியாக ஒரு குரல் கேட்டது.

    ''பார்த்தாயா.... முக்தாராம் என்னை இங்கே கொண்டு வந்து, துவைத்து இப்படி தலைகீழாக தொங்க போட்டு விட்டு போய் விட்டான்'' என்ற குரல் கேட்டது.

    பாபா பேசுவது போன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வாமன்ராவ், அங்கு பாபாவின் உடை துவைத்து காயப் போட்டிருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார்.

    அந்த உடையை எடுத்த வாமன்ராவ், கண்களில் ஒற்றிக் கொண்டு, பிறகு தானே அதை அணிந்து கொண்டார். அப்படியே துவாரகமாயிக்கு சென்றார்.

    தன் உடையை வாமன் ராவ், அணிந்து வந்ததைப் பார்த்ததும் பாபாவுக்கு கோபம் வந்தது ''நீ ஏன் இந்த உடையை அணிந்தாய்?'' என்று கடிந்து கொண்டார். என்றாலும் வாமன்ராவ், அந்த உடையை கழற்றவில்லை.

    அந்த உடையை தொடர்ந்து அணிந்தால்தான் தனக்கு சன்னியாசம் கிடைக்கும் என்று வாமன் ராவ் உறுதியாக நம்பினார். அவர் நம்பியது போலவே விரைவில் அவர் சன்னியாசி ஆகி விட்டார்.

    பாபாவுக்கு நீண்ட நாட்களாக சேவை செய்து வந்த பல பக்தர்கள், அவரிடம் பழைய உடையை தாருங்கள் என்று கெஞ்சி கேட்பதுண்டு. ஆனால் பாபா அவ்வளவு எளிதாக தன் கிழிந்த உடைகளை கொடுக்க மாட்டார். எரித்து விடுவார்.

    • முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார்.
    • ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார்.

    சாய்பாபா எப்போதும் தன் உடல் முழுவதையும் மூடும் வகையில் நீண்ட அங்கி போன்ற உடை அணிவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்.

    முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார்.

    ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார்.

    ஆடைகள் உடுத்தும் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    உடை கிழிந்து போனால், அதை பாபாப தூர எறிந்து விட மாட்டார்.

    யாரிடமும் கொடுக்கவும் மாட்டார். துவாரகமாயில் எரியும் அக்னி குண்டத்தில் தன் உடையைப் போட்டு எரித்து சாம்பலாக்கி விடுவார்.

    சில உடைகளை பாபா கந்தலாகும் வரை போடுவார்.

    அந்த உடை கிழிந்தாலும் கூட அதை தைத்து போட்டுக் கொள்வார்.

    சில உடைகளை அணிந்த சில தினங்களில் புதுசாக இருந்தாலும் கழற்றி தீயில் போட்டு எரித்து விடுவார்.

    பாபாவின் உடைகள் கொஞ்சம் கிழிந்து இருப்பது தெரிந்தால் தத்யா பட்டீல் என்ற பக்தர், அந்த கிழிசலில் விரலை விட்டு இழுத்து மேலும் கிழித்து விட்டு விடுவார்.

    அப்படியானால் தான் பாபா புதிய உடை உடுத்துவார் என்பதற்காக அவர் அப்படி செய்வார்.

    • மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
    • மனித பிறவியில் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு பிறவிகள் தரப்படுகிறது.

    'போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!' இதை கூறாத மனிதர்களே கிடையாது.

    ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரினமாக பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படி ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும்.

    மனித பிறவி எடுப்பது எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட பிறவிதான் மனிதப்பிறவி.

    மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் என்னென்ன பாவங்கள் செய்தால், அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    * புழுக்கள் நெளியும் அசுத்தமான இடங்களில் வசிப்பவர்கள், போன ஜென்மத்தில் அடுத்தவர்கள் பொருளை திருடியவர்களாக இருந்திருப்பார்கள்.

    * துர்நாற்றம் வீசும் வாய் உடையவர்கள், வாயில் புழுக்கள் உருவாகும் பிரச்சனைகளை கொண்டவர்கள், போன ஜென்மத்தில் மதுபானம் விற்றவர்கள், குடி போதைக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    * போன ஜென்மத்தில் கொலை செய்தவன், இந்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறந்திருப்பான். அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசும்.

    * இந்த ஜென்மத்தில், கொலை செய்தால் அடுத்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறப்பது கட்டாயம் நடக்கும்.

    * பசுவை கஷ்டப்படுத்தியவர்கள், பிறர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஊமையாகவும், குஷ்டரோகியாகவும் பிறந்திருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் அதிகமாக பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி இருந்தால், இந்த ஜென்மத்தில் ஊமையாக பிறந்து இருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் குருவுக்கு துரோகம் செய்திருந்தால், இந்த ஜென்மத்தில் விகாரமான தோற்றத்தோடு பிறவி எடுத்திருப்பார்கள்.

    * ஒருமுறைகூட இறை வழிபாடு செய்யாதவர்கள், புனித தீர்த்தத்தில் நீராடமல் இருப்பவர், இப்படிப்பட்டவர்கள் ஆளில்லா காட்டில் குரங்காக பிறவி எடுப்பார்கள்.

    * பல புரோகிதர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், ஒரு புரோகிதர் மட்டும் தவறு செய்தால் அந்த பாவம் அவரை மட்டும் போய் சேராது. அந்த இடத்தில் இருக்கும் அனைத்து புரோகிதர்களும் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறவி எடுப்பார்கள்.

    * ஒழுக்கம் இல்லாதவன், வேத சாஸ்திரத்தை நன்கு அறிந்து, புரோகிதராக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் கட்டாயம் பன்றி பிறவி எடுப்பார்.

    * இந்த பிறவியில் தரித்திர நிலைமையோடு வாழும் ஒருவர், போன ஜென்மத்தில் கஞ்சனாக இருந்திருப்பார்.

    * தங்கத்தை திருடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் புழுக்கள் நிறைந்த நரகத்தில் வேலை செய்வான்.

    * பிறன் மனைவியின் மீது ஆசைப்படுபவன் அடுத்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறவி எடுப்பான்.

    * பசி என்று வந்தவருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி துரத்தி அடித்தால் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது.

    * கோவில் சொத்தை அபகரித்நவர்கள், பொய்க்கணக்கு எழுதுபவர்கள் எல்லாம் செவிட்டு மாடாகவும், குருட்டு மாடாகவும் பிறவி எடுப்பார்கள்.

    * அடுத்தவர்களை துன்புறுத்தி பணம் சேர்ப்பவன், அடுத்த பிறவியில் பூனையாக பிறப்பான்.

    * பசுமையாக இருக்கும் மரம், செடி, கொடிகளை வீழ்த்தி எரித்தவன் அடுத்த ஜென்மத்தில் மின்மினிப்பூச்சியாக பிறவி எடுப்பான்.

    * வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை இழிவாக நடத்தி பழைய சாப்பாடு போட்டு அவமதிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கருங்குரங்காக பிறவி எடுப்பான்.

    * அடுத்தவர்களுக்கு பயன்தரக்கூடிய பூ காய் கனி பழம் நிறைந்த மரத்தை எவனொருவன் வெட்டுகின்றானோ, அவன் அடுத்த ஜென்மத்தில் எதற்கும் உபயோகம் இல்லாதவனாக பிறவி எடுப்பான்.

    * நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவன், தவறாக தீர்ப்பு சொல்பவன் அடுத்த ஜென்மத்தில் கோட்டான் பிறவி எடுப்பான். கோள் சொல்லுபவர்கள் பல்லியாகவும், தவளையாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

    * உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காத முதலாளிகள், அட்டைபூச்சி ஆக அடுத்த ஜென்மத்தில் பிறப்பார்கள்.

    * அதிகப்படியான லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, அநியாயத்திற்கு துணை போகும் நபர்கள் அடுத்த ஜென்மத்தில் ஈ கொசு மூட்டைப்பூச்சி ஆக பிறவி எடுப்பார்கள். இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் தான்.

    மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நாராயணன், கருடனுக்கு கூறியதாக கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த ஜென்மத்தில் இந்த தவறை செய்தால், அடுத்த ஜென்மத்தில் மேல் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் கட்டாயம் நமக்கு கிடைக்கும்.

    இந்த ஜென்மத்தில் கொசு, புழு, பூச்சி, பல்லி, குரங்கு, முதலை, பன்றி இப்படியாக பிறந்திருக்கும் ஒவ்வொரு உயிரினமும் போன ஜென்ம மனிதப் பிறவியில் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்கள்தான் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

    இதையெல்லாம் படிக்கும்போது முடிந்தவரை தவறுகள் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அறிந்தும், அறியாமலும் தவறுகள் செய்திருந்தால் கூட அதற்கான பிராயச்சித்தத்தை உடனே தேடிக் கொள்ளுங்கள். சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் கூட தேட முடியாது. தவறு செய்யாமல் வாழ்வதே உத்தமம்.

    அடுத்த ஜென்மத்தில் மேற்குறிப்பிட்டுள்ள இப்படி ஒரு பிறவி எடுக்க யாரும் விரும்பமாட்டார்கள். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? அது உங்கள் கையில் தான் உள்ளது.

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    ×