search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: தினமும் எத்தனை பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதி தெரியுமா?

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, சாமி தரிசனம் செய்ய தினமும் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
    தூத்துக்குடி :

    கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாட்டில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். முதல்நாள் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முக்கியமானது ஆகும்.

    இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவிலின் உள்ளே பக்தர்கள் தரிசனம் செய்யலாம், ஆனால், கோவிலுக்கு வெளியில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது.

    குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி 17-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி, 26-ந் தேதி சூரசம்ஹாரம், 27-ந் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்து இருக்கும். சமூக இடைவெளியை கடைபிடித்து தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    தசரா திருவிழாவையொட்டி கடற்கரை பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் கோவில் பிரகாரத்தில் நடைபெறும். பக்தர்கள் யாரும் கோவில் பகுதியில் தங்க அனுமதி கிடையாது. தற்காலிக கடைகள் அமைக்கவும் அனுமதி கிடையாது.

    பக்தர்கள் வேடம் அணிந்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை கோவிலுக்கு வேடம் அணிந்து வருவதற்கு அனுமதி கிடையாது.

    கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படாது. பக்தர்கள் யூடியூப், உள்ளூர் டி.வி.க்கள் மூலம் கோவில் நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம்.

    கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உடன் இருந்தார்.
    Next Story
    ×