search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரதசப்தமி விழா முன்னேற்பாடாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மாட வீதியில் ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    ரதசப்தமி விழா முன்னேற்பாடாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மாட வீதியில் ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளதை காணலாம்.

    திருப்பதியில் நாளை ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருகிறார்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன.

    அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே இதுஒரு ‘‘மினி பிரம்மோற்சவ விழா’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    முதலில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில், ‘‘சூரிய ஜெயந்தி விழா’’ நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.

    சூரியக்கதிர்கள் உற்சவர் மீது விழும். அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா நான்கு மாடவீதிகளில் வலம் வரத் தொடங்கும். மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோ‌ஷத்துடன் வழிபடுவர்.

    வாகன வீதிஉலாவை பார்க்க லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளை சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் அமர்ந்து காலை முதல், இரவு வரை வாகன வீதிஉலாவை பார்த்து வழிபடும் பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடவீதிகளில் 55 உணவுக்கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கிருந்து கேலரிகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும். பனி மற்றும் வெயிலுக்காக பக்தர்களின் நலன் கருதி தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் பக்தர்கள் மாடவீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருக்க, ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களை கவரும் வகையில் மாடவீதிகளில் பல்வேறு இடங்களில், ‘ரங்கோலி கோலம்’ வரையப்பட்டுள்ளது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள் வரிசையாக கொண்டு செல்லப்படும். திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.

    ஐதராபாத் டிரம்ஸ், கேரள செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படும். பல்வேறு பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி செல்வார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்குச் சேவை செய்வார்கள். ரத சப்தமி விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, பக்தர்களின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய பிரபை வாகனம் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணிவரை, சிறிய சே‌ஷ வாகனம் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை, கருட வாகனம் பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை, அனுமந்த வாகனம் மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை நடக்கின்றன.

    அதைத்தொடர்ந்து சக்கர ஸ்நானம் மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை, கல்ப விருட்ச வாகனம் மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை, சந்திரபிரபை வாகனம் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை நடக்கின்றன.
    Next Story
    ×