search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து காலை 5.20 மணிக்கு திருக்கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஐந்தாம் திருவிழாவான வருகிற 14-ந்தேதி மேலக்கோவிலில் (சிவன் கோவிலில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    ஏழாம் திருவிழாவான 16-ந்தேதி அன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் கும்ப லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    எட்டாம் திருவிழாவான 17-ந்தேதி காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவிலில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து நண்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக்கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார். ஒன்பதாம் திருவிழாவான 18-ந்தேதி அன்று சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    பத்தாம் திருவிழாவான 19-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது.

    மறுநாள் (20-ந் தேதி) பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×