என் மலர்tooltip icon

    உலகம்

    வரிவிதிப்புக்கு அதிகாரம் இல்லை: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
    X

    வரிவிதிப்புக்கு அதிகாரம் இல்லை: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

    • அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
    • இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×