என் மலர்
உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என குறிப்பிட்ட டிரம்ப்
- சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.
மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.