

ரோம்:
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7. ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று நேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் பிரதமர் இம்மானுவலைச் சந்தித்தார். அப்போது இருவரும் கட்டி அணைத்து, கைகுலுக்கிக் கொண்டனர். தொடர்ந்து இருதரப்புக்கு இடையிலான உறவுகள் மேம்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.