தம்பி ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து கோட்டையில் இருந்து வெளியேற்ற மன்னர் சார்லஸ் உத்தரவு.. ஏன்?

விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தம்பி ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து  கோட்டையில் இருந்து வெளியேற்ற மன்னர் சார்லஸ் உத்தரவு.. ஏன்?
Published on

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது இளைய சகோதரர் ஆண்ட்ரூ உடைய இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை கோட்டையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.  

லண்டன் மேற்கில் உள்ள விண்ட்ஸர் கோட்டையில் ஆண்ட்ரூ அவர் வசித்து வரும் மாளிகையை காலி செய்ய மன்னர் உத்தரவித்தகக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மரபுப்படி அவரின் இளவரசர் பட்டத்தை பறிப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

பாலியல் வலையமைப்பை உருவாக்கி சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு அனுப்பி வைத்த அமெரிக்க பெரும்புள்ளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

இளமைப் பருவத்தில் இளவரசர் ஆண்ட்ரூவால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அமெரிக்க-ஆஸ்திரேலிய வழக்கறிஞர் விர்ஜீனியா கியுஃப்ரேவின் குற்றச்சாட்டுக்கு மூலம் எப்ஸ்டீன் உடனான ஆண்ட்ரூவின் தொடர்வு அம்பலமானது.

விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு வெளியான அவரது Nobody's Girl என்ற நினைவுக் குறிப்பில், ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த களங்கத்தின் காரணமாகவே மன்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது நீண்ட மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூ உடைய "டியூக் ஆஃப் யார்க்" பட்டத்தை தானாக முன்வந்து ஆண்ட்ரூ துறந்தார். தற்போது, அவரது மற்ற பட்டங்களையும் சார்லஸ் மன்னர் பறித்துள்ளார்.

தற்போது கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மற்றொரு இடத்தில் வசிக்க உள்ளதாக என்று கூறப்படுகிறது.  

யார் இந்த எப்ஸ்டீன்?

ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-பும் முந்தைய காலங்களில் எப்ஸ்டீன் உடன் நெருக்கமாக இருந்ததும் தற்போது சர்ச்சையாவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com