என் மலர்
உலகம்

ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
- இது ரஷியாவின் எண்ணை வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும்.
- கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அதற்கு இது வரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால் ரஷியா மீதான கோபத்தில் அங்கிருந்து கச்சா எண்ணை வாங்கி வரும் இந்தியாவுக்கு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விரைவில் முடிவடைவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கடந்த சில வாரங்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா மீது டிரம்ப் 2-வது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார். தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை டிரம்ப் பயன்படுத்தி உள்ளார்.
இது ரஷியாவின் எண்ணை வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும். கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து ரஷியா தனிமைப்படுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






