

ரோம்:
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.
ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.