என் மலர்
உலகம்

ரஷிய அதிபரை தொடர்ந்து இந்தியா வரும் உக்ரைன் அதிபர்?
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் கடந்த 4-ந்தேதி 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் புதினிடம் மோடி வலியுறுத்தினார்.
அதேபோல் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இந்தியாவின் பங்களிப்பை புதின் பாராட்டினார்.
இந்த நிலையில் புதின் வருகையை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீதான போருக்கு பிறகு ரஷிய அதிபர் புதினின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தற்போது உக்ரைன் அதிபர் இந்தியாவுக்கு வர உள்ளார். இது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று கருதப்படுகிறது.






