என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய உத்தரவு: செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு
    X

    இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய உத்தரவு: செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு

    சீன எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய சீன எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் வீசாட், ட்ரூகாலர், யுசி பிரவுசர் மற்றும் யுசி நியூஸ் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது தகவல் திருட்டு உள்ளிட்டவற்றை புதிய உத்தரவு மூலம் தடுக்க முடியும்.

    சர்வதேச உளவுத்துறை அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் தகவல்களை திருட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அனைத்து ராணுவ வீரர்களும் சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ராணுவம் மட்டுமின்றி மத்திய ஆயுதப்படை, இந்தியா-திபெத் எல்லை காவல் படையினர் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ள லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் படி தொடர்ச்சியாக பல்வேறு உத்தரவுகளை வீரர்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகிறது.

    இதன்மூலம் அனைத்து வீரர்களையும் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் மூலம் பரவும் சைபர்செக்யூரிட்டி சார்ந்த அச்சுறுத்தல்களில் சிக்காமல் பாதுகாக்க முடியும். அலுவலக மற்றும் தனித்துவ பயன்பாடு என ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமானதாகும். குறிப்பாக சீனாவை சேர்ந்த மின்சாதனங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.



    முன்னதாக இந்திய விமானப்படை சார்பில் அனைத்து அதிகாரிகள் மற்றும் விமானிகளும் அவர்களை சார்ந்த குடும்பத்தாரும் சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது. இவை இந்தியாவில் இருந்து தகவல்களை சீனாவிற்கு பரிமாறிக் கொள்ளும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தியாவின் லடாக், இமாச்சல் பிரதேச எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×