என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 2 பள்ளி மாணவர்கள் கைது- ஒருவர் தலைமறைவு
    X

    கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ்

    நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 2 பள்ளி மாணவர்கள் கைது- ஒருவர் தலைமறைவு

    • கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19). தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில், வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார்.

    சமீப காலமாக டவுனில் தனது பெரியப்பா வீட்டில் தங்கியுள்ள வெங்கடேஷ், கூலி வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல், வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் ஓடிவரவே, அதனை பார்த்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு த.மு. சாலையில் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைக்கவே, மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி விழுந்தனர்.

    உடனே அந்த கும்பல் வெங்கடேசை குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதனை பார்த்து அந்த பகுதி கடைக்காரர்களும், வெங்கடேசின் நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2023-ம் ஆண்டு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரை 2 கைகளையும் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில், தற்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேசுக்கு தொடர்பு இருந்துள்ளது.

    அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது.

    அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா(19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 சிறார்களை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.

    கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.

    கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×