மக்கள் பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுப்பதில்லை- நடிகை கஸ்தூரி

ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.
மக்கள் பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுப்பதில்லை- நடிகை கஸ்தூரி
Published on

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் அப்போதே தண்டிக்கப்பட்டனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்துக்கு பதில் இல்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்பு திறமையான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர். அவரை போல யாருமே இல்லை. அந்த பதவிதான் அவருக்கு நல்ல பொருத்தம். அவர் எதிர்க்கட்சி தலை வராக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் மது கிடைக்காது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் கிடைக்கிறது. கனிமொழி பலமுறை பொய்மொழி ஆகி விடுகிறார். அவர் ஸ்டிக்கர் ஒட்டும்பணியை சிறப்பாக செய்கிறார். நல்ல ஆட்சி வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும். தமிழகத்தில் இரட்டை இலை வளர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மது விற்பனையை வைத்து அரசு இயங்குகிறது. பார் நடத்த அனுமதி கொடுத்து கட்சிக்கு நிதி திரட்டுகிறார்கள். நம்மை சுற்றி எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை இரவு 9 மணிக்கு மேல் எங்கேயாவது நடைபயிற்சி போக சொல்லுங்கள் பார்க்கலாம்.

தமிழகத்தில் நடக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் போராட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் என மக்களின் எந்த பிரச்சினைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது. ஜன நாயகன் பட விவகாரம் கோர்ட்டு வரை சென்றதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com