என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக #DMK ஆட்சி உள்ளது - உதயநிதி
- தொழில் வளர்ச்சியில் சென்னையுடன் போட்டி போடும் அளவிற்கு தூத்துக்குடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது.
- இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இன்று தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், கலைஞர் கனவு இல்லம், பட்டாக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தொழில் வளர்ச்சியில் சென்னையுடன் போட்டி போடும் அளவிற்கு தூத்துக்குடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம் உங்களுடைய உழைப்பும் ஒற்றுமையும் தான். இன்று தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு மகளிர் தான் காரணம். தமிழக முதல்வரின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.
தேர்தலை காரணம் காட்டி சிலர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவே வியக்கும் வண்ணம் மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தியவர் முதல்வர். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பட்டா வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மீனவ கிராமங்கள் கடற்கரைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி உள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை ஐந்தாயிரத்தில் இருந்து எட்டாயிரம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக நமது திராவிட ஆட்சி உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






