என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம்- லோகோ வெளியீடு
- விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.
முன்னதாக பிரசார வாகனம் இன்று மாலைக்குள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி பிரசாரத்தை முடித்துக் கொண்டு காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு வழியாக பால் பண்ணை சென்று சிதம்பரம் பைபாஸ் வழியாக அரியலூர் புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் அரியலூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மதியம் 12 மணியளவில் திறந்த வெளி வாகனத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து மருதையான் கோவில் வழியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புறப்பட்டு செல்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு இடங்களில் 21 நிபந்தனைகளுடன் ஒரு மணி நேரம் பேச காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குன்னம் பஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் பேரளி வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை சங்குப்பேட்டை வழியாக மேற்கு வானொலி திடல் செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் மரக்கடை பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் கட்சிக் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் பிரசாரக் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் வார இறுதி நாள் என்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பல்லாயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
விஜய் வருகையால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது இந்த சுற்றுப்பயணம் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 2 நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பெரம்பலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே, விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயண லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்ணா அட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆண்டுகளுடன் 2026-ஐ குறிப்பிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.






