என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் - மு.க.ஸ்டாலின்
- வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது
- வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
வள்ளலார் வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில்
?வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
?ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
?வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.






