என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கமே தமிழக தேர்தல் முடிவை தீர்மானிக்கும் - ஆதவ் அர்ஜுனா
    X

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கமே தமிழக தேர்தல் முடிவை தீர்மானிக்கும் - ஆதவ் அர்ஜுனா

    • கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது
    • ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட முன்னிறுத்தாத திமுக கட்சி, சிறுபான்மையினரின் காவலன் என்கிற முகமூடியை இனி பயன்படுத்த முடியாது.

    விஜயின் தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறிய வாக்குறுதி குறித்து அமமுகவின் டிடிவி தினகரனும், தேமுதிகவின் பிரேமலதாவும் பாசிட்டிவ் ஆக பேசி இருந்தனர். இதனால் ஒருவரும் தவெகவுடன் கூட்டணி வைப்பார்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை.

    அக்கட்சித் தலைமையிலும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களே தலைவர்களாக உள்ளார்கள். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வசப்படுத்தியே அதிகார பாதையில் அவர்கள் இதுவரை பயணித்துள்ளனர்.

    இப்படி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக கபளீகரம் செய்யும் தந்திர அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது.

    ஒரே குடும்பம், ஒரே கட்சி என்கிற அதிகார மமதையில் தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளை அடிமை சாசனம் எழுதி தரச் சொல்லும் திமுக தலைமைக்கு ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.

    இதே திமுக தலைமைதான் 2024 தேர்தல் வெற்றிக்குப் பின் "221 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது, கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது" என்றெல்லாம் பெருமை பேசியது.

    அவர்களின் கணக்குப் படி பார்த்தாலும் திமுக போட்டியிட்ட 22 (கொ.ம.தே.க உள்பட) தொகுதிகளில் சராசரியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகள் 132 தான்.

    ஏனைய 102 இடங்களில் கூட்டணிக் கட்சிகள்தான் போட்டியிட்டன. காங்கிரசுக்கு 9 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 54 சட்டமன்ற தொகுதிகள், விசிகவுக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள், மதிமுகவிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் என்கிற விகிதத்தில் அப்போது பிரித்துகொடுத்த திமுக இப்போது சட்டமன்றத் தேர்தலில் மட்டும் இந்த பகிர்வை மறுப்பது ஏன்?

    ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா?

    இனி இங்கே அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது.

    காரணம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறி இருக்கிறது. அந்தக் குரலை பிரதிபலிக்கிற சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்.

    ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளது. 'அதிகார பகிர்வு' என்பதையே அனைத்து கட்சிகளும் தங்களின் உரிமையாக முழங்கும் காலமும் கனிந்துள்ளது.

    கூட்டணிக்கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்து ஆட்சிக்கு வந்து, அதிகாரத்திற்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்கிற மாயையை இன்றைய ஆளும்கட்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நியாயமான முழக்கத்தை எழுப்புபவர்களை வழக்கம்போல ஆர். எஸ். எஸ் என்றும் பாஜக என்றும் முத்திரை குத்தி திமுக தப்பித்து விட முடியாது.

    கடந்த 2024 தேர்தலில் போட்டியிட்ட 22 தொகுதிகளில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட முன்னிறுத்தாத திமுக கட்சி, சிறுபான்மையினரின் காவலன், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பு என்கிற முகமூடிகளை எல்லாம் இனி பயன்படுத்த முடியாது.

    'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்' பங்கு என்கிற சுயமரியாதை முழக்கமே 2026- தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாய் இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×