என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இன்று தமிழக-கேரள எல்லையோர கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தப்படம்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லை கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கோவை:
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிர்வாக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கவும், சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகமும் கேரளாவும் இணைந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல கேரளாவில் இருந்து பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, போலீஸ் அதிகாரி அஜித்குமார், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரியங்கா, இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன், போலீஸ் சூப்பிரண்டு சாபு மேத்யூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் காலங்களில் அதிகரிக்கும் பணப் பரிமாற்றங்கள், சட்டவிரோதமாக பணம் மற்றும் பொருட்கள் கடத்தல், போதைப்பொருள் நகர்வு போன்றவற்றை தடுக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
சோதனைச் சாவடிகள் அதிகரித்தல், வாகன சோதனைகளை தீவிரப்படுத்தல், இரவு நேர கண்காணிப்பை பலப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
எல்லைப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பறக்கும் படைகளை அமைத்தல், முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கு இரு மாநிலங்களின் இணைந்த நடவடிக்கை முக்கியம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.






