என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு
- சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தனியாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், சிறுமிகளை கடிப்பதோடு வயதானவர்களையும் விரட்டி விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூர் வி.ஜி.வி., குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை எல்லை மீறி போயுள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வி.ஜி.வி., குடியிருப்பு 10-வது வீதியில் வீட்டின் முன் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென விரட்டி சென்று பாய்ந்து கடித்தது. இதில் அந்த சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அதே நாய் நேற்று ஒரே நாளில் அந்தப் பகுதியில் மேலும் பலரையும் கடித்து குதறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தெருநாய்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களும் போதிய பாதுகாப்பு இன்றி அவற்றை பொது இடங்களுக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சிறுமியை தெருநாய் விரட்டி சென்று கடிக்கும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






