என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள்
- அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர் , ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடை எண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 450 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் 10-ந்தேதி 450 கூடுதல் பஸ்களும், 11-ந்தேதி 100 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 750 கூடுதல் பஸ்கள், 13-ந்தேதி 850 கூடுதல் பஸ்கள், 14-ந்தேதி 800 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.
மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந்தேதி 250 கூடுதல் பஸ்களும் 11-ந்தேதி 150 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 250 கூடுதல் பஸ்கள், 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் 575 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது.






