விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்- சீமான்

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம்.
விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்- சீமான்
Published on

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாக குழு கலந்தாய்வு கூட்டம் சென்னை, வடபழனியில் இன்று நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக சீமான் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்.

முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம் களத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட உள்ளோம்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பணம் வாங்காமல் 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.

இது 60 லட்சமாக உயர்ந்து ஒரு கோடியை எட்டும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவசரம் காட்டக்கூடாது. நான் தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன். அது மெதுவாகத்தான் வேலை செய்யும். கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு அந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

10 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற விஜயகாந்த் கூட்டணி அமைத்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தான் அவரது வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே எந்த தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது.

தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com