என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'ஜி.டி. நாயுடு மேம்பாலம்' கோயம்புத்தூர்காரனாக எனக்கு பெருமை - சத்யராஜ்
- ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார்.
- மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார்.
கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில்,
நான் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறேன். நான் ஷூட்டிங்கிற்காக இங்கு வந்து இருக்கிறேன். படத்தின் பெயர் ஜி.டி. நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி, ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்.
இதில் ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார். நான் ராமையா பிள்ளை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில், ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார். அதற்காக கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.
எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி. நாயுடு அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






