என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்., தி.மு.க.வுக்கு சென்றால் நாங்கள் த.வெ.க.வுக்கு செல்வோம்- ஆதரவாளர்கள் 'திடீர்' போர்க்கொடி
- காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
ஊட்டி:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேனி தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இதனால் தற்போது அரசியல் களத்தில் ஓ.பி.எஸ். தனியாக நிற்கிறார். ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் இதுவரை தெளிவான முடிவு எடுக்கவில்லை.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பேசி வருகின்றனர்.
அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவர், தி.மு.க அரசையும், முதலமைச்சரையும் பாராட்டி பேசினார். இதனால் அவர் தி.மு.க. கூட்டணிக்கு நெருங்கி வருவதாக பார்க்கப்படுகிறது.
ஓ.பி.எஸ்.சின் இந்த முடிவுக்கு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பந்தலூர், கூடலூர் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்றால் அவருடன் நிர்வாகிகள் நாங்கள் யாரும் செல்லமாட்டோம். ஓ.பி.எஸ்., தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நாங்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியை விட்டு வெளியேறுவோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக நீலகிரியை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறியதாவது:-
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எங்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு, அதில் தி.மு.க.விற்கு செல்வதா? அல்லது வேறு கட்சிக்கு செல்வதா? என 2 விருப்பங்கள் கேட்கப்பட்டன.
அப்போதே நாங்கள் தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டோம். மேலும் 88 மாவட்ட செயலாளர்களில் 11 பேர் மட்டுமே தி.மு.க.வுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த நாங்கள் விஜயின் த.வெ.கவுக்கு செல்வதை தவி வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறியிருந்தார், இந்த நிலையில் தை முடிந்து மாசி தொடங்கிவிட்டது. ஆனாலும் அவரால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் குழம்பியபடியே இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.






