என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
- நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
- பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
* அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சியளித்தவர் என அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
* பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
* 2007-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞர் ஆட்சியில் கொண்டாடப்பட்டது.
* பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






