என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனிமொழி நன்றாக இந்தி பேசுவார்- எல்.முருகன்
    X

    கனிமொழி நன்றாக இந்தி பேசுவார்- எல்.முருகன்

    • தமிழை வளர்க்கும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது.
    • திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த நங்கநல்லூரில் பா.ஜ.க. ஒன்றிய அலுவலக கட்டிடத்தை மத்திய மந்திரி எல்.முருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவரிடம் இந்தி தெரியாததால் டெல்லியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குறிப்பிட்டு உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டபோது, கனிமொழிக்கு நன்றாக இந்தி பேச தெரியும் என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, பா.ஜ.க. கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சி. 14 கோடிக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கட்சி.

    இந்த கட்சி நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது. கட்சியின் நிறுவனரான ஷியாம் பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கான தனி சட்டத்தை ரத்து செய்வதற்கு போராடி உயிர் துறந்தார். அதை பா.ஜ.க. இப்போது நிறைவேற்றி உள்ளது. அதைப் போல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தோம். அதை நிறைவேற்றி உள்ளோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றோம், அதுவும் இப்போது நிறைவேறி உள்ளது. தமிழை வளர்க்கும் கட்சியாகவும் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ரெயில்வே, வங்கி தேர்வுகளை தமிழில் எழுதும் உரிமையை கொண்டு வந்தோம்.

    பிரதமர் மோடி தமிழுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஐ.நா.சபையில் பிரதமர் மோடி தமிழின் பெருமையை எடுத்து வைத்தார். திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது.

    தி.மு.க. இடம் பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்கள் தமிழுக்காக செய்தது என்ன?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×