என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு
    X

    சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு

    • 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட் டத்தொடர் இதுவாகும்.
    • வேளாண் பட்ஜெட்டு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவையில் அவர் உரையில் இல்லாதவற்றை பேசிவிட்டு வெளியேறினார். அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை.

    கவர்னருக்கு தரப்பட்ட உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபையில் கவர்னர் உரை என்ற நடைமுறை தேவையில்லை என்பதற்கான அரசியல் சாசன திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 22, 23-ந் தேதிகளில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24-ந் தேதி பதிலளித்து பேசினார்.

    அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அமைச்சர் எ.வ.வேலு முன்மொழிய, அது நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவை மறுபடி கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    இந்தநிலையில் சட்டசபையின் அடுத்த கூட்டத்தை இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார். காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், அவைக்கு அளிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட் ஜெட் உரையை படிப்பார்.

    இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது.

    இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.

    இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் (அதாவது 20-ந் தேதி வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தளிக்கும் இடைக்கால பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார்.

    2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மகளிர் உரிமைத்தொகை, சிறப்புத்தொகை என ரூ.5 ஆயிரத்தை பெண்களுக்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நிதி ஆதாரங்களை கேட்டு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

    மேலும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள் பற்றி அவையில் பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். இதில் வெளிநடப்பு, வெளியேற்றம் போன்ற சம்பவங்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது.

    அரசியல் ரீதியாக கவனித்தால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே இன்னும் ஏற்படாத கூட்டணி உறவும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கக்கூடும்.

    வேளாண் பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை அவையில் படிப்பார்.

    Next Story
    ×