என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை தேர்தலை சந்திக்க இ.பி.எஸ். வியூகம் - செயற்குழுவில் அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கிறார்
    X

    சட்டசபை தேர்தலை சந்திக்க இ.பி.எஸ். வியூகம் - செயற்குழுவில் அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கிறார்

    • கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
    • அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து அளித்தும் உபசரித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்து வருகிறார்.

    இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அவர் விருந்து அளித்தும் உபசரித்தார்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (2-ந்தேதி) ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை மக்கள் மத்தியில் விளக்கி கூறியும் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பிக்க உள்ளார்.

    கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி பணியாற்றவேண்டும் என்றும் அப்போதுதான் கூட்டணி பலத்துடன் நாம் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் நாளைய கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துகளை தெரிவிக்க இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×