என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விருதுநகரில் தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்கிறார்
- தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்
- சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் திடலில் தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் இன்று மாலையில் நடக்க இருக்கிறது.
இதற்காக மாநாடு போன்று பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள்.
தி.மு.க. அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளை முழுமையாக பின்பற்றி உரிய துறைகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தன்னார்வலர்கள், மருத்துவக்குழுக்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு திடலுக்கு வருகின்றனர்.
ஏற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.






