என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்
- வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
- தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
சென்னை:
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இப்போது முதல் கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், வி.எப்.6, வி.எப்.7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.
வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை (4-ந்தேதி) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.






