என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பா.ஜ.க.வினருக்கு அழைப்பு
    X

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பா.ஜ.க.வினருக்கு அழைப்பு

    • முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.
    • பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார். தனது முதற்கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.

    அன்று மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளிலும், மறுநாள் 8-ந் தேதி கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் ஒரே நாளில் 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ரோடு ஷோ மேற்கொள்வதுடன், அதன் நிறைவில் மக்கள் மத்தியில் பேசி அ.தி.மு.க.வுக்கு ஆதரவும் திரட்டுகிறார்.

    இந்த ரோடு ஷோவின் போது அவர் வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்க உள்ளார். இதுதவிர அந்தந்த தொகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார்.

    இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்க உள்ளனர். இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதை முன்னிட்டு மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தக்கூடிய இடம், மக்களை சந்தித்து பேசும் இடங்களை கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.

    அங்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவரை மேள, தாளங்கள் முழங்க வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க கூடிய இடங்களிலும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோரை திரட்டி தங்கள் பலத்தை காட்டுவதற்கும் அ.தி.மு.கவினர் தயாராகி வருகின்றனர்.

    Next Story
    ×