என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சை தடை செய்ததற்கு கடும் கண்டனம் -  செல்வப்பெருந்தகை
    X

    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சை தடை செய்ததற்கு கடும் கண்டனம் - செல்வப்பெருந்தகை

    • பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
    • ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.

    மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.

    ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×