என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மின்சார ரெயில் பயணிகள் கவனத்திற்கு... 45 நாட்கள் எழும்பூரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
    X

    மின்சார ரெயில் பயணிகள் கவனத்திற்கு... 45 நாட்கள் எழும்பூரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

    • இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
    • மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

    தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் புறநகர் ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக வழக்கம் போல் பத்து மற்றும் 11-வது நடைமேடைகளில் கையாளப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6- வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்- அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து மின்சார ரெயில்களும் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.

    அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரெயில்களும் இதே காலகட்டத்தில் எழும்பூரில் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.

    மின்சார ரெயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரெயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த 45 நாட்களில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது. புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரெயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரெயில்கள் செங்கல்பட்டு- தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது.

    இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 160 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும். இதே போல கிளாம்பாக்கம் ரெயில் பணியும் நிறைவு பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மார்ச் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×