என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.பி. பதவி வேண்டாம் - அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்
- தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
- பா.ம.க. யாருடன் கூட்டணி என்பதும் இதுவரை முடிவாகவில்லை.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த முறை அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என பா.ம.க. எண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனக்கு எம்.பி. பதவி வேண்டாம் என்பதில் பா.ம.க. தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாகவும், கட்சியின் தலைவராக மாநில அரசியலில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. யாருடன் கூட்டணி என்பதும் இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி முடிவாகாததால் எந்த கட்சியிடமும் ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என்றும் ராஜ்ய சபா சீட் கேட்டால் சட்டசபை தேர்தலில் கூட்டணி பேர வலிமையை குறைக்கும் என்றும் பா.ம.க. எண்ணுகிறது.
முழுக்க முழுக்க மாநில அரசியல் என்பதில் அன்புமணி திட்டவட்டமாக இருப்பதாகவும், மாநில அரசியலில் பங்கெடுத்து அமைச்சரவையில் இடம் பெறுவதே பா.ம.க.வின் இலக்கு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி அரசியலை பா.ம.க. தலைமைக்கு நம்பிக்கைக்கு உரிய வேறு ஒருவரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






