என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டையில் 4-ந்தேதி கூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா பிரசாரம்
- சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
- கூட்டணி உறுதியானதும் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் கள ஆய்வு சென்று புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். மேலும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே வரும் தேர்தலையொட்டி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து பேசி வருகிறார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்துவதுடன், வலுவாக காலூன்றும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமை, மத்திய மந்திரி பியூஸ் கோயலை களம் இறக்கி உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் கடந்த வாரம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்து பேசினார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யையும் சந்தித்து தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பியூஸ்கோயல் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய த.வெ.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதேபோல் அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்கழகம் மற்றும் பா.ம.க.வையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12-ந்தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 4-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
இதற்காக நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் மறுநாள் (5-ந்தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் திருச்சியில் நடை பெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.
அமித்ஷா பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகாததால் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானதும் அவர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அமித்ஷா வருகை தமிழக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






