என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என் வாழ்வின் மிகப்பெரிய துக்கம் - கரூர் கூட்டநெரிசல் குறித்து மனம் திறந்த ஆதவ் அர்ஜுனா
    X

    'என் வாழ்வின் மிகப்பெரிய துக்கம்' - கரூர் கூட்டநெரிசல் குறித்து மனம் திறந்த ஆதவ் அர்ஜுனா

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மனம் திறந்துள்ளார்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடுமபத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதே சமயம் த.வெ.க. சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

    ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×