search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதற்கான தடையை நீக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி மனு
    X

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதற்கான தடையை நீக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி மனு

    • ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.
    • உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, கவர்னருடன் நட்பு ஆகியவற்றை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

    இது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது.

    கொடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொது நலன் அடிப்படையில் கருத்து தெரிவித்தேன்.

    எனவே, எனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரியிருக்கிறார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ந் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ் குமார் தள்ளிவைத்தார்.

    Next Story
    ×