search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அந்தியூர் அருகே இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    அந்தியூர் அருகே இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.

    வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×