search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுச்சேரி பா.ஜனதா ஆட்சிக்கு தி.மு.க. கடும் கண்டனம்- ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு
    X

    புதுச்சேரி பா.ஜனதா ஆட்சிக்கு தி.மு.க. கடும் கண்டனம்- ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

    • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவரும்-மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற- இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

    அத்துடன், "உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மை தான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.



    அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை-அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை!

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித் தனமான கொலையையும்-பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங்கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×