search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீங்கள் நலமா என்று கேட்டால் மக்கள் என்ன பதில் சொல்வார்கள்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
    X

    'நீங்கள் நலமா' என்று கேட்டால் மக்கள் என்ன பதில் சொல்வார்கள்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    • பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது.
    • முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டினுடைய திட்டங்களால் பயனடைந்தவர்களை தொடர்பு கொள்ள கருத்துக்களை கேட்க 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    எடப்பாடியார் இது குறித்து, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை எடுத்து வைத்துள்ளார். 'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வரே, அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேறாமல் போச்சு, சட்டம் ஒழுங்கு சீரழிந்து போச்சு, சொத்து வரி, குடிநீர்வரி, மின் கட்டணம் உயர்ந்து போச்சு, விலைவாசி விண்ணை தொடுகிற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு, போதை பொருள் அதிகமாச்சு, தமிழக வாழ்வாதார உரிமை பறிபோச்சு என்று இப்படி வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.

    தேர்தலுக்கு, தேர்தல் மட்டுமே 'நீங்கள் நலமா' என்று கேட்கிற முதல்வரே, இன்றைக்கு மக்கள் நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் எத்தனை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மனித நேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்களிடம் 'நீங்கள் நலமா' என்று கேட்டால் அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

    பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. அது காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    தமிழகத்திலேயே கெட்டுப்போன சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு என்று தமிழகம் இன்றைக்கு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் ''நீங்கள் நலமா'' என்று கேட்டால் எப்படி மக்கள் பதில் சொல்வார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தக்க பதிலடியை மக்கள் தருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×