search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியார் பல்கலைக்கழகம் கல்விக்காக தனி நிறுவனம் தொடங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
    X

    பெரியார் பல்கலைக்கழகம் கல்விக்காக தனி நிறுவனம் தொடங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

    • விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும்.
    • கடந்த காலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் எள் முனையளவுக்குக் கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், அவரது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தை கூறுபோட்டு விற்பனை செய்வதற்கு சமமான இந்த நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரியும் என்ற போதிலும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல வாரங்களாக வேடிக்கை பார்த்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தான் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நால்வரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

    இது தவிர தங்கவேல் உள்ளிட்ட மூவர் இணைந்து அப்டெக்கான் ஃபோரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து, பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக அவற்றை தொடங்கவில்லை. மாறாக, தங்களை இயக்குனர்களாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தை விட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாகவே தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்களால் பெரியார் பல்கலைகழகம் பாதிக்கப்படும்.

    இனியும் நிலைமை மோசமடையாமல் தடுக்க, பெரியார் பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×