search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஐ.சி.யு. வார்டில் படுத்திருக்கிறார். அவரை பார்த்தேன். அனைத்து மருத்துவர்களும் அங்கிருக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருக்கிறார்.

    செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை. நெஞ்சு வலியால் சிரமமாக உள்ளார். அவர் அமலாக்கத்துறையால் தாக்கப்பட்டாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அவரை பார்த்தேன். அவரால் பேச முடியவில்லை. அதனால் தட்டிக் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

    கே:-அவரை பார்க்க உள்ளே அனுமதிக்கிறார்களா?

    ப:-நான் அவரை பார்க்க 1 மணிநேரம் காத்திருந்தேன். முதலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றனர். அதன் பிறகு பார்க்க அனுமதித்தனர்.

    நான் அனுமதி வாங்கி தான் செந்தில்பாலாஜியை பார்த்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

    நாங்கள் 2-3 முறை அவரை அழைத்துப் பார்த்தோம். ஆனால் அவர் கண் விழித்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்.

    கே:- அவரது வீட்டில் என்ன நடந்தது?

    ப:-அது எனக்கு தெரியாது. நாங்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்த நிலையை தான் கூற இயலும்.

    அவர் பேச ஆரம்பித்தால் தான் என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும். அவர் சுய நினைவில் இல்லை. காது பக்கம் வீக்கம் உள்ளது. கண்டிப்பாக துன்புறுத்தப்பட்டிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி விரைவில் குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    முதலமைச்சர் நேற்று கூறியது போல ஒன்றிய அரசு பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், கட்சிகாரர்களையும் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது.

    டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியது போல் தமிழகத்திலும் அரங்கேற்றி உள்ளது. இதற்கெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுபவர் அல்ல.

    எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலும் திறமையும் தி.மு.க.வுக்கு நீண்டகாலமாக இருந்திருக்கிறது.

    மிசா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே பழிவாங்கியவர்கள் உண்டு. எதுவாக இருந்தாலும் அவைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு.

    ஒன்றிய அரசு அரசியலுக்காக செய்கிற இந்த நிகழ்வுகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ரகுபதி கூறிய தாவது:-

    நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாதாரண ஒரு மனிதனுக்கு கூட கேள்வி கேட்கிற உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் தந்துள்ளது.

    அப்படி இருக்கும் போது எல்லா விஷயத்திலும் மத்திய அரசு அத்துமீறி அதிகாரத்தோடு செயல்படுகிறது. அந்த அதிகாரம் பறிக்கப்பட கூடியதுதான். அதை மக்கள் பறிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்துவிட்டு சென்றனர்.

    Next Story
    ×