search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தியாக தலைவி தானே எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்- ஜெ.தீபா பேசிய மற்றொரு புதிய பரபரப்பு ஆடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தியாக தலைவி தானே எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்- ஜெ.தீபா பேசிய மற்றொரு புதிய பரபரப்பு ஆடியோ

    • ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள்.
    • சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார்.

    சென்னை:

    ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கும், சசிகலாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக தீபா பரபரப்பான ஆடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தீபா புதிதாக வெளியிட்டு உள்ள ஆடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்வது போல் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டார்கள். அது அப்பல்லோ மருத்துவமனையே கிடையாது என்று பலரும் பல தடவை சொல்லி இருக்கிறார்கள்.

    குறிப்பாக அது 2016-ம் ஆண்டு எடுத்த போட்டோ கிடையாது. கமிஷன் விசாரணை நடக்கும்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள் நான் சென்றேன். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை காண்பித்தார்கள். அது ரொம்ப பெரிய அறையாக இருந்தது. அது போட்டோவில் இருப்பது போன்று சிறிய அறை அல்ல. ஜன்னல் வழியாக ஒரு மரம் இருப்பது போல் காட்டுகிறார்கள். அது கிடையாது. இதுவும் ஒரு அப்பட்டமான பொய்.

    அந்த வீடியோ வெளியிட்ட அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் சசிகலா தரப்பை சேர்ந்தவர். சசிகலா சொல்லி தான் பழைய வீடியோவை தயார் செய்து கொடுத்து வெளியிட்டுள்ளனர். போலி வீடியோ தயார் செய்வதில் சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அது தான் அவர்கள் தொழிலே. அதை நல்லா ரெடி பண்ணி இருக்கிறார்கள்.

    அவர்களின் சொந்த குடும்பத்தினர் எல்லோருமே அதிகாரத்தை விரும்புவார்கள். டி.டி.வி. தினகரனை அரசியலை விட்டு விலக சொல்லுங்கள். உங்களுக்கு எதற்கு அரசியல். நீங்கள் எப்போதும் நல்லவர்கள் தானே. உங்களுக்கு எதுவும் வேண்டாம் தானே. ஜெயலலிதாவை பாதுகாத்தவர்கள் தானே. அரசியல் வேண்டாம் என்று விலகி விடுங்கள். எதற்கு அதில் இருக்கிறீர்கள்?

    ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள். சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.

    மக்களால் விரட்டியடித்து துரத்தப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரா? அப்போது என் வீட்டு வாசலில் எதற்காக வந்து நின்றார்கள். நீங்கள் வேண்டாம் என்று தானே மக்கள் வந்தார்கள். நீங்கள் தியாகத்தலைவி தானே. எல்லாவற்றையும் விட்டு செல்லுங்கள். இப்போது எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் உங்களை எல்லோரும் நம்புவார்கள்.

    எனது தாயாரை பற்றி பேச நீங்கள் யார்? உங்கள் அண்ணி இளவரசி அண்ணியா? யாருக்கு அண்ணி? உங்களுக்கு தானே? எனது தாயார் பெயரை விஜயலட்சுமி என்று சொல்ல நீங்கள் யார்? எனது தம்பியை கெடுத்து, எனது குடும்பத்தை அழித்து, எனது அப்பாவை கொன்று, எனது அத்தையை கொன்று, என் வாழ்க்கையை அழித்து, என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை அழித்து, பணத்துக்காகவும், அதிகார ஆசைக்காகவும், எவ்வளவு செய்வீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம். ஏதோ ஒரு மூலையில் தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். எனது தாயார் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் தடுத்து ஏமாற்றியவர் தானே நீங்கள். நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எனக்குத்தான் தெரியும். என் தம்பி எப்படி உண்மையை சொல்லுவான். நீங்கள் தான் அவரை கைக்குள் வைத்திருக்கிறீர்களே? முதலில் அவரை விடுங்கள்.

    சசிகலா நீங்கள் அரசியலை விட்டு விலகுங்கள். டி.டி.வி. தினகரன், உங்கள் குடும்பம் எல்லோருமே விலகுங்கள். ரூ.5 லட்சம் கோடியை எங்கிருந்து சம்பாதித்தீர்கள். எங்கள் அத்தை தங்க முட்டையிடும் வாத்தா? இப்படித்தானே சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்கள். உங்களுக்கு தங்க முட்டை இடுவதற்காக ஜெயலலிதாவை அடிமையாக வைத்திருந்தீர்களா?

    தைரியம் இருந்தால் நீங்கள் என்னிடம் வந்து பேசுங்கள். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம். நாங்கள் என்ன செய்தோம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பேசுவோம். எனது அப்பாவுக்கும், அத்தைக்கும், எனக்கும், எனது தாயாருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்படியெல்லாம் நல்லுறவு என்று நான் காட்டுகிறேன்.

    அந்த வீட்டுக்குள் இருக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதிரில் வீடு கட்டுகிறீர்களா? எப்படி வந்தது பணம். இதையெல்லாம் எல்லோரும் கேட்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் கேட்க வேண்டும். தமிழக மக்கள் கேட்க வேண்டும். தமிழக அரசு அவர்கள்மீது நடவடிக்கைகளை தள்ளிப் போடாமல் யாருக்கும் கட்டுப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை.

    சசிகலா மற்றும் அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எனது குடும்பத்துக்கு தெய்வம் எனது தாயார். அவர் எனது உயிர். எங்கள் குடும்பத்துக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனது தாயாரை பற்றி பேசினால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் தீபா கூறியுள்ளார்.

    Next Story
    ×