search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்: வலைகளை அறுத்து கடலில் வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்
    X

    ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்: வலைகளை அறுத்து கடலில் வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்

    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இதனை கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவர்களை விடுக்க கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு சிறிய படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று 152 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். இதனால் பல ஆயிரம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் இழப்புடன் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க செல்லவே மீனவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×