search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்- சோனியா காந்தி
    X

    பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்- சோனியா காந்தி

    • பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
    • போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. மாநில சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி.

    மொழி, சாதி, மதம் கடந்து சிந்தித்து உழைத்தவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக ஈடுபட்டவர் கருணாநிதி.

    பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கான உரிமையை பெறுவது நீண்ட பயணம்.

    காந்தி, நேரு போன்றவர்கள் அனைவருக்கும் ஓட்டு உரிமை என்பபைத உறுதிபடுத்தினர். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தான் சமத்துவத்தை பெற் வேண்டிய நிலை உள்ளது. தடைகளை தாண்டி பெண்கள் உரிமையை நிலைநாட்ட முடியும்.

    தலைமைத்துவத்திற்கு இந்திரா காந்தியை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

    ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததுபோல் மாறிவிடும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணி வந்து தான் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி தரும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறாமல் போனது. இந்தியாவில் தமிழகம் பெண்களுக்கான ஒளி விளக்காக உள்ளது.

    பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழக காவல் துறையில் நான்கில் ஒரு பங்காக பெண்கள் உள்ளனர். அரசு பணிகளில் பெண்களுக்கான பணியிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.

    தாய் சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. பெற்று தந்த உரிமைகளை எல்லாம் சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×