search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்- சீமான்
    X

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்- சீமான்

    • காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது.
    • மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை.

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த, கச்சத்தீவை தாரை வார்த்த, என தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இந்த சட்டத்தை தி.மு.க. தடுத்து இருக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகிற கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?. வருகிற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் தி.மு.க. நேரடியாக களம் இறங்குவதாக முடிவு எடுப்பார்களா?.

    மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை. எனக்கு தெரிந்து புரட்சி தமிழர் என்றால் நடிகர் சத்யராஜை தான் அப்படி அழைப்போம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி கொண்டு இருக்கிறோம். எங்கள் கொள்கை முடிவுப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையை ஏற்று யாராவது கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வைப்பது குறித்து பார்க்கலாம்.

    அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×