என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
- சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- பொங்கல் முடிந்து திரும்புவதற்காக மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






