search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தை கடத்தல் வதந்தியால் தாக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்: மன்னிப்பு கேட்டு உதவி செய்த மக்கள்
    X

    குழந்தை கடத்தல் வதந்தியால் தாக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்: மன்னிப்பு கேட்டு உதவி செய்த மக்கள்

    • வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது

    கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6-ம் தேதியன்று குழந்தைகள் கடத்த போவதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து, வடமாநிலத்தவர்கள் 5 பேரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

    வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் நேற்று இரவு (மார்ச் 8) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவல்துறையினருடன் , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினர். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, " இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×